Tuesday, March 4, 2014

வெள்ளையானை - புத்தகவிமர்சனம்


      சமீபத்திய சென்னை புத்தக கண்காட்சியில் ஜெயமோகனின் 'வெள்ளையானை' புத்தகம் வாங்க நேர்ந்தது.. அரசியல் புத்தகங்களே பெரும்பாலும் படித்து சலித்துவிட்டதால் ஒரு நாவல் வாங்கலாம் என்ற விளைவே 'வெள்ளையானை'. இதற்க்கு முன்னால் ஜெயமோகனின் சிறிய நாவலான 'நூறு நாற்காலிகள்' படித்தேன். அவரின் எழுத்துக்கள் மிகைப்படுத்தப் படாமல் எதார்த்தமாக இருந்ததே என்னை 'வெள்ளையானை' மீது ஆர்வம் கொள்ளச்செய்தது. நிற்க.

       புத்தகம் - 1870களில் ஏற்ப்பட்ட மாகாண பஞ்ச காலாத்தில் ஐரிஷ் நாட்டை சேர்ந்த (பிரிஷ்க்காரன்அல்ல ஐரிஷ்காரன் ) எய்டன் சென்னை மாகாண தளபதியாக பதவி ஏற்கிறான். இறக்க குணம் உள்ளவன். நல்லவன். இப்போது சென்னை கடற்கரையில் இருக்கும் ஐஸ் ஹவுஸ் (விவேகானந்தர் இல்லம்) கட்டிடத்தில் அமெரிக்காவை சேர்ந்த கம்பெனி ஐஸ் இறக்குமதி தொழிலை நடத்தி வருகிறது. அங்கு வேலைசெய்யும் இரண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்கள் கொல்லப்படுகின்றனர். விசாரணையை எய்டன் நடத்துகிறான் ஆனால் சாதி வேறுபாடுகள் மூலம் அவர்களுக்கு அவனால் நீதியைப்பெற்றுத்தர முடிவதில்லை. மேலும் அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு பிரச்சினை அதிகரிக்கிறது. புத்தகத்தின் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த அறிவாளியான காத்தவராயன் என்பவன் மூலம் சேரிப்பகுதிகளுக்கு செல்கிறான். அவர்களின் நிலையை கண்டு கண்ணீர்விடுகிறான். பஞ்சம் ஏற்ப்பட்ட பகுதிகளுக்கு செல்கிறான் அவர்களின் நிலைமை மேலும் அவனை மனதளவில் துன்புறுத்துகிறது. பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் அவனின் உயர் அதிகாரிகள் எப்படி அவன் செய்யும் நல்லவைகளை தடுக்கின்றனர். அவர்களின் சுயநலத்திற்காக சாதிய கொடுமைகளை அவர்கள் ஆமோதிக்கின்றனர், இந்தியர்களின் சாதிவேற்றுமைகளை பயன்படுத்தி மதம் மாற்ற கிறிஸ்துவ அமைப்புகள் நல்லது செய்கிறோம் என்ற போர்வையில் வந்ததுப்பற்றி விரிவாக, அழுத்தமாக, கற்பனை இல்லாமல் சொல்கிறது 'வெள்ளையானை'.


                                    (மாகாண பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்)



மாகாண பஞ்சத்தைப் பற்றி பெரும்பாலும் நாம் உண்மைத் தகவல்களை திரட்டவே முடியாது. அப்படியிருந்தும் கிட்டத்தட்ட எல்லாத் தகவல்களையும் சேகரித்திருக்கிறார்.  (ஆனால் அதில்வரும் கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பதை என்னால் ஏனோ நம்பமுடியவில்லை). அந்த பஞ்சத்தில் பெரும்பான்மையினராக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 2 கோடி பேர்(!) (ஹிட்லர் கொன்றது 60 இலட்சம் பேர்) இறந்ததன் மூலம் அவர்கள் சிறுபான்மை சமூகத்தினரானார்கள் என்பதுமட்டும் மறுக்கமுடியாத உண்மை. ஹிட்லரைவிட நம் முன்னோர்கள் சாதி, தீண்டாமை எனும் போர்வையில் மூர்கத்தனமாக இருந்தது பற்றி நினைக்கும்போது இந்த நாவல் அமைதியாக நம்மை குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது. தாழ்த்தப்பட்டோருக்கு நாம் இழைத்த துரோகங்களின் பாவம் நம்மை இன்னும் ஏன் தாக்காமல் இருக்கிறது என்று என்னை என்னிடமே கேள்விகேக்கச் செய்கிறது. அப்போது ஏற்ப்பட்ட தொழிலாளர் போராட்டத்தை பற்றியும் இந்தநூல் விளக்கமாக பேசுகிறது.

    மொத்தத்தில் எழுத்துநடை சற்றே கடினமாக இருப்பினும், கண்ணில் நீர்வடிய செய்கிறார் ஜெ. மோ